Tuesday, June 1, 2010

பேதம்

வீதியிலிறங்க வீட்டுப்படலை திறந்தேன்
பத்துவயதுப் பையன் பாய்ந்து சாத்தினான்
ஏனென்று கேட்டேன் எடுத்துரைத்தான் பக்குவமாய்

வீட்டு நாய்க்கு வீதியிலிறங்கத் தடையாம்

விபச்சாரம் தான் காரணமாம்
அல்சேசன் அடுத்த வீட்டுப் பெட்டை நாயிடம்
அடிக்கடி போய்வருதாம்

”கறி போட்டும் கனகாசு செலவழிச்சும்

கறுமம்! சொல் கேக்குதில்ல”
குச்சொழுங்கையில் நின்று குமுறுகிறார் குமரேசன்

பெட்டைக் குட்டியென்றாற் பிரச்சினையென்று

குட்டி நாயைக்கூட கொல்லச் சொல்கிறார்
அஞ்சு பெட்டை பெத்த அன்னம்மாக்கா

நாய்களெல்லாம் சேர்ந்து நடுச்சந்தியில்

காரசாரமாய்க் கறுவிக் கொண்டன

“சாதி பேதம் நாம் பார்ப்பதில்லை - பார்த்ததாய்ச்

சரித்திரத்தில் குறிப்புமில்லை”

”காதலென்று சுற்றிவிட்டுக் கடைசியில்

கட்டக் காசு கேட்டு நிற்பதில்லை”

”கட்டுகிறேன்; கடைசிவரை காப்பாற்றுகிறேன் என்றுவிட்டு

கற்பு அழித்த பின்னே காணாமற் போவதில்லை”

என்றாலும் எம்நிலமை இப்படியாய் ஆனதுவேன் -நம்

பெண்ணினத்தைப் பேதம் செய்து
கொன்று குவிக்கிறாரே மனிதக் கூட்டம்
சொல்லாயோ தீர்ப்பை இறைவா
கொல்வாயே இவ் மனிதப் பேய்களை

தீர்ப்பிடும் நாள் - கடவுள் சொன்னார்

”உழைத்துயிர் கொடுக்கும் உங்களிற்கா இந்த நிலை
தவறு செய்யும் மனிதருக்குத் தண்டனை மரணம் தான்
வீதி வழி சென்று வெடுக்கெனக் குறுக்கிட்டு
வீழ்த்திடுக மனிதரை அவர் வினைப்பயனை அனுபவிக்க”


Creative Commons License

http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/

எல்லாம் வல்ல எம் பெருமான் எழுந்தருளி வருகிறார்

எல்லாம் வல்ல எம் பெருமான் எழுந்தருளி வருகிறார்
எடுபிடிகள் எல்லோரும் விரைந்தெழுந்து புறப்படுக
ஊரோட்டமாம் இன்று தெருவெல்லாம் தேரோட்டம்
ஊர்க்கோடி வரையும் பக்தர்கள் பெருங்கூட்டம்

ஊதி ஊதித் தள்ளும் நாதஸ்வரம் நாலு கூட்டம்
ஊரிலுள்ள இளசுகளிற்கு ஒருபெருங் கொண்டாட்டம்
இரவு பகலாய் அலறும் இலவுஸ்பீக்கர் சாம்ராச்சியம்
இரைந்து குழற வீணாகிறது எங்கள் குழந்தைகளின் எதிர்காலம்

நாட்டில்லொரு கோவில் நல் ஊரிலொரு கோவில் என்றிருந்ததின்று
றோட்டை மறித்துக் கோவில் நடு வீட்டிற்குள்ளும் கோவிலென்றாகிப்போச்சு
சொன்ன மந்திரம் என்னவென்று சொட்டும் புரியாமல்
ஆகா அற்புதமென்று அதிசயிக்கும் எம் ஆன்மிகவாதிகள்

தங்கத்தால் எல்லா அங்கத்தையும் சோடித்து
தரணி வியக்க வருகின்றார் முருகனும் முருகவேள் சர்மாவும்
சிவப்புச் சால்வை கட்டியதால் சிவாச்சாரியார் சித்தாந்தவாதியென்று
எங்கள் வேதாந்த விற்பனர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

அண்ணாமலையான் அடிக்க மலம்……………………..”
அழகாகப் பாடுகிறார் அருளாளர் ஒருவர்
நாயேனைஎன்பதனைநாயே! எனைஎன
பிரித்துப் பொருளுணர்த்தி பிரமிக்க வைக்கறார் இன்னெருவர்

திருவிழாச் செய்பவர் எல்லார்க்கும் தெரியுமிடமாய்ப் பார்த்து நிற்கிறார்
பெருவிரலில் கூட பெரிய மோதிரமிரண்டு போட்டிருக்கிறார்
தட்சணைக்காய் தனி வரிசையில் நிற்கிறார்கள்
பிச்சா பாத்திரமேந்தும் பெருமானின் திருவுடல் தீண்டுவோர்


பல குடம் நிறைத்து பாலாபிடேகம்
பக்தி மழையில் நனைகிறது பக்தர் பெரும்கூட்டம்
பாலுகாய் பரிதவிதழுகிறது பக்தரின் குழந்தையொன்று
அழுகுரல் மறைகிறது அரோகரா ஒலிதனிலே

சிதறு தேங்காய்கள் சிதறி பறந்திடவே
பசியில் சேரிக் குழந்தையொன்று பாய்ந்து பொறுக்குகிறது
கையில் கிடைத்ததை வாயில் வைக்கமுதல்
கடவுளுடையது எனகூறி பறிக்கப்படுகிறது

தேசியப் பொருண்மியம் தேரேடும் வீதியில்
சிதறு தேங்காயாக சிதைக்கப் படுகிறது
கச்சான் கடைகளைத் தவிர வேறொன்றில்
முதலீடு இல்லை என்பது முக்கியம் பெறுகிறது

அன்னதானத்துக்காய் அலையும் வரிசையில்
அதிகம் படித்த கூட்டம் அலைமோதுகிறது
அன்றாடச் சாப்பாட்டுக்கே திண்டாடுபவர்கள்
உள்ளே வரக்கூடாதென்று உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது

காசு கொடுத்தால் கருப்பக்கிரகம் வரையல்ல
கையால் தொட்டும் பார்க்கலாம்
பணம் உள்ளவன் கணம் நினைத்தால்
பக்தன் வீடு தேடி பகவான் வருவார்

குழந்தை குட்டி கொஞ்ச மனைவியென்று
கோவிலுக்குள்ளே ஐயரின் குடித்தனம்
அர்த்தப் பிரகாரத்துக்குள்ளேயே அட்டாச் பாத்துறூம்
அய்யர் போவதற்காய் அமைத்தும்விட்டோம்

திருப்பணி என்றே கூறி இவ்வரும்பணியை
அழகாய்ச் செய்கின்றன ஆலயங்கள்
அமெரிக்கா நாட்டில் அடிமையாய் உளைத்து
அனுப்புகிறார் காசு இதற்காய்த் தானே

ஐந்து பேருக்கு படிப்பிக்கவேணும்
ஐம்பது ரூபா என்றால் கொடுக்கோம்
ஐம்பது கோடியில் ஆலய நிர்மாணம்
அடுத்த நாளே கொடுத்துத் தொலைப்போம்

ஆண்டவன் என்று ஒருவர் இருந்தால்
அவரே வருவார் அவதரிப்பார்
அநியாயம் செய்யும் அடியார், அந்தணர்
அனைவரையும் அழித்தே ஓய்வார்.

இக் கவிதை எழுதியவரின் அனுமதியுடன் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விமர்சனங்களுக்கு http://www.facebook.com/prabunada


Creative Commons License

http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/

Monday, April 12, 2010

ஏன் பறையொலி இணையத்தில்?

தமிழரின் தொன்மை வாழ்வியலின் வரலாற்றுச் சின்னமாகவும்; இந்திய தேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமுகக் குழுமங்களின்(தலித்துகளின்) விடியலின் குறியீடாகவும்; யாழ்ப்புலத்தில் இந்து வேளாளச் சமுகக் கட்டமைப்பின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட சமுகக் குழுமமொன்றின் உடமையாகவும் அடையாளப் படுத்தப்படுகின்றதுபறை’.

பெரும் அர்ப்பணிப்புகளிற்கும் அவலங்களிற்கும் பின்னரும் ஈழத்தமிழரின் வாழ்வு மேம்படாமைக்கான மூலகாரணங்களாக நிலைகொள்கின்ற, தமிழ்ச் சமுகத்தினுள் புரையோடி மறைந்துள்ள சாதிய, சமயப் பிற்படுத்தல்களிற்கு எதிராகக் கிளர்ந்தெளுகின்ற ஓர் களமாக; புலமை நிலையிலும் உணர்வு நிலையிலும் சமுக மாற்றத்திற்கான ஒருதளமாக; பிற்படுத்தப்பட்ட சமுகக் குழுமங்களின் சமுக மேலசைவிற்கான ஒரு பலமாக; அரசியற் தளத்திலிருந்து முற்றிலும் அப்பாற்பட்டு சமுகத் தளத்திற் செயற்படுகின்ற ஓர் சக்தியாக உருவெடுக்க வேண்டுமென்பதே பறை இணையத்தின் முனைப்பாகும்.